நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹூவா மொய்த்ரா மீது பா.ஜ.க எம்.பி புகார்; நெறிமுறை குழுவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பரிந்துரை.
![article-image](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/4UwbTgNeLiaGBdiCZneZ.jpg)
திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபேயின் "கேள்வி கேட்க லஞ்சம்" பெற்றார் என்ற புகாரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையின் நெறிமுறைக் குழுவிற்கு பரிந்துரைத்தார்.
பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்காக மஹூவா மொய்த்ரா ஒரு தொழிலதிபரிடம் "லஞ்சம்" பெற்றதாக நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார், மேலும் மஹூவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க "விசாரணைக் குழுவை" அமைக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தினார்.
"நிஷிகாந்த் துபே மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் மீது மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுத்த பிறகு தனக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் வரவேற்கிறேன்" என்று மஹூவா மொய்த்ரா பதிலடி கொடுத்தார்.
மக்களவையின் நெறிமுறைக் குழுவின் தலைவராக பா.ஜ.க உறுப்பினர் வினோத் குமார் சோன்கர் உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, சபாநாயாகர் ஓம் பிர்லாவுக்கு "பாராளுமன்றத்தில் 'கேள்வி கேட்க லஞ்சம்' என்ற கேவலமான நிகழ்வு நடந்துள்ளது, மஹுவா மொய்த்ராவின் நேரடி ஈடுபாடு உள்ளது, பாராளுமன்ற உறுப்பினர் (லோக்சபா) கடுமையான ‘சிறப்புரிமை மீறல்’, ‘அவையை அவமதித்தல்’ மற்றும் ஐ.பி.சியின் 120-ஏ பிரிவின் கீழ் ‘கிரிமினல் குற்றம்’ செய்துள்ளார் என்று கடிதம் எழுதினார்.
ஒரு வழக்கறிஞரிடமிருந்து பெற்ற கடிதத்தை மேற்கோள் காட்டி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் இடையே லஞ்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான "மறுக்க முடியாத" ஆதாரங்களை வழக்கறிஞர் பகிர்ந்து கொண்டதாக நிஷிகாந்த் துபே கூறினார்.
சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், சமீப காலம் வரை மக்களவையில் மஹூவா மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமத்தின் மீது கவனம் செலுத்தியது, அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க்கில் இருந்து குறுகிய விற்பனை பற்றிய ஒரு முக்கியமான அறிக்கை வெளியானதில் இருந்து இந்தக் கேள்விக் கேட்கப்பட்டன என்று நிஷிகாந்த் துபே குறிப்பிட்டுள்ளார்.