தமிழகம் வந்த மத்தியக் குழுவினர் வெள்ள சேதத்தைப் பார்வையிட்ட பின்னர், மிக்ஜாம் புயல், வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது, தமிழக அரசுக்கு எங்களது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், வீடுகளில் இருந்த உடைமைகள், இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சில இடங்களில் வீடுகளும் சேதமடைந்தன. வெள்ள பாதிப்பில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டது.
மிக்ஜாம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசிடம் முதற் கட்டமாக இடைக்கால நிவாரணமாக 5 ஆயிரத்து 60 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மத்திய அரசு மாநில அரசுக்கு பேரிடர் நிவாரண நிதியாக முதற்கட்டமாக இடைக்கால நிவாரணமாக ரூ. 450 கோடி வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில், புயல் மழை வெள்ள சேதத்தைப் பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், மத்தியக் குழு திங்கள்கிழமை இரவு சென்னை வந்திறங்கினர். இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, நிதித் துறை செலவினம், மின்சாரத்துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.வெள்ள சேதத்தைப் பார்வையிட சென்னை வந்த மத்திய குழுவினர் செவ்வாய்க்கிழமை (12.12.2023) காலை தலைமைச் செயலாளரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர், மத்தியக் குழு இரண்டு பிரிவுகளாக பிரிந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில், வட சென்னை பகுதியில் மூன்று பேர் கொண்ட மத்தியக் குழு அதிகாரிகள், முதற்கட்டமாக ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார்கள். இந்த ஆய்வுப் பணியில், வேளாண் நலத்துறை இணை இயக்குநர் சிவாகர், எரிசக்தி துறை துணை இயக்குநர் பவ்யா பாண்டே, நெடுன்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். மத்தியக் குழுவுடன் தமிழகத்தைச் சேர்ந்த, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காட்டி விவரித்தனர். புகைப்படங்கள் மூலம் வெள்ள பாதிப்பின் தீவிரத்தை மத்தியக் குழுவிடம் விவரித்தனர்.சென்னை பட்டாளம், டெமெல்லோஸ் சாலை, ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அடுத்த கட்டமாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டர்.
ஆய்வுக்கு பின் மத்திய குழுவினர் அளித்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது, அவர்களுக்கு எங்களது பாராட்டுகள். 45 செ.மீ.,க்கும் அதிகமான மழை பெய்த காரணத்தால் தண்ணீர் அதிக அளவில் தேங்கியது ஆய்வில் தெரியவந்தது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்த போதிலும், எதிர்பாராத விதமாக புயல் சென்னை அருகே நீண்ட நேரம் மையம் கொண்டதால் பாதிப்பு அதிகமாக இருந்தது. 2015-ஐ ஒப்பிடுகையில் மழை பாதிப்புகளுக்கு பிறகு மிக விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் உயிர்சேதம் மிகவும் குறைந்துள்ளது.” என்று கூறினர்.