சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அறந்தாங்கி நிஷா; குழந்தைகளிடம் செய்த நெகிழ்ச்சி செயல்; நன்றி தெரிவித்த பொதுமக்கள்,மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டாலும், சில பகுதிகளில் வெள்ளம் வடிய 4 நான்கு நாட்களுக்கு மேலானது. வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களில் சிலர் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர்.
![article-image](https://valaiyithal.com/wp-content/uploads/2023/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-1024x576.webp)
இந்தநிலையில், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், திரை நட்சத்திரங்கள், சின்னத்திரை பிரபலங்கள் எனப் பலரும் நிவாரண உதவிகளை செய்து வந்தனர். இதில் குறிப்பிடத்தக்க வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பகுதி மக்களுக்கு அறந்தாங்கி நிஷா ஓடி ஓடி உதவி செய்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்தநிலையில், நிவாரணப் பொருட்கள் வழங்கியதோடு, அறந்தாங்கி நிஷா செய்த செயல் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நிவாரணப் பொருட்கள் வழங்கி முடித்த கையோடு, அறந்தாங்கி நிஷா அங்கிருந்த குழந்தைகளிடம் படிப்பு தான் முக்கியம் என எடுத்துரைத்தார்.குழந்தைகளிடம் பேசிய நிஷா, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு உதவ நாங்கள் இங்கு வந்தப்போது, நிறைய பேர் எங்களிடம் கேட்டது, புத்தகங்கள், புத்தக பை, லஞ்ச் பேக் போன்றவை தான்.
இதிலிருந்தே இங்கு நிறைய பேர் படிக்க ஆர்வமாக இருப்பது தெரிகிறது. உங்க அப்பா அம்மா எல்லாம் திருஷ்டி கயிறு, திருஷ்டி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யுறாங்க. ஒவ்வொரு பொம்மையையும் விற்க அவங்க அவ்வளவு கஷ்டப்படுறாங்க. அப்படி பொம்மை விற்பது உங்களை படிக்க வைக்கத் தான். படிப்பு ரொம்ப முக்கியம். நம்மை போன்ற மக்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் தங்கம். நீ எல்லாரும் நல்லா படிக்கணும். நல்லா படிச்சு உலகமே உங்க மேல திருஷ்டி படுற மாதிரி வரணும். வெள்ளத்தில் கார், பணம் எல்லாம் போச்சு, ஆனா படிப்பு மட்டும் நம்மை விட்டுப் போகாது,” என்று கூறினார்.